2014 ஆம் ஆண்டின் முதல் பாதியை ஏப்பம் விட்டு மறு பாதிக்காக விழி பிதுங்கி காத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த ஆண்டில் இதுவரை தமிழ் சினிமா கடந்து வந்த பாதையை ஒரு நோட்டம் விட்டு பார்ப்போமா?
கடந்த 2012 - 2013 ஆம் ஆண்டின் தமிழ் சினிமா நிலவரத்தினை பார்த்தால் மிகவும் ஆரோக்கியமான படைப்புக்களை தாங்கி தமிழ் சினிமாவின் தரத்தினையும் ரசிகர்களின் ரசனை மாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தமையை இங்கு சுட்டி காட்டியே ஆக வேண்டும் .
மிகவும் குறைந்த பட்ஜட் , அறிமுகமில்லா புதுமுகம், சைலண்டாய் வந்து சக்கை போடு போட்டு சென்ற படங்கள் என பெருமிததோடு சொல்லிக்கொள்ளலாம் கடந்த கால கோலிவுட் சினிமா நிலவரத்தினை. அத்தோடு பெரும் பொருட்செலவில் பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாக்கத்தில் பலத்த எதிர்பார்ப்போடு வந்த படங்கள் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தினையும் கொடுத்து விட்டு சென்றது இந்த காலங்களில் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
பார்க்க போனால் தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தலைநிமிர வைக்கும் அளவு மேலோட்டமான ஆரோக்கிய நிலை தென்படுகிறது என உறுதியாக கூற முடியாது. ஒட்டுமொத்த பிரபல இந்திய சினிமா தளங்களுடன் (பாலிவுட், டோலிவுட் மொலிவுட் ) ஒப்பிடும் போது கடந்த 2014ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 103 திரைப்படங்கள் நம்ம தமிழ் கோலிவுட்டில் வெளியாகியுள்ளமை ஒரு சாதனை என சொல்லப்பட்டாலும் படங்களின் வருமானம், ஏனைய நிலவரங்களுடன் ஒப்பிடும் போது இது ஒரு "தொய்வான தொங்கு நிலைமை" என்றே குறிப்பிடுகின்றனர் .
துண்டு போட வைத்த பெரிய தலைகள்
வருட ஆரம்பத்திலேயே பலத்த எதிர்பார்புக்களை தூண்டிய படங்கள் தலையின் " வீரம்" மற்றும் தளபதியின் " ஜில்லா". முட்டி மோதி கொள்ளும் அஜித் - விஜய் ரசிகர்களின் பேர் எதிர்பார்ப்புக்களை சுமந்து பொங்கல் வெளியீடாக வந்தது இப்படங்கள். ஆனாலும் மாபெரும் வெற்றியினை இரண்டு படங்களும் எட்டவில்லை , ஒப்பிடும்போது தளபதியின் ஜில்லா வை விட தலையின் வீரம் வருமானம் சார் நிறைவினை தந்தது என ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
இது தொடர்பில் தமிழ்நாடு திரை இயக்குனர்கள் சங்க தலைவர் கேயார் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இரு படங்களும் பேரளவில் பெற்றிருந்தாலும் கேளிக்கை வரி விலக்கிற்கான தகுதியினை இவ்விரு படங்களும் பெற தவறியமை குறித்து சுட்டி காட்டியுள்ளார்.
அவ்வாறே முதலீட்டாளர்களின் கையை இந்த இருபடங்களும் கடித்தமை சுட்டி காட்ட வேண்டும். போட்ட முதல் திரும்ப கிடைக்காமையை இந்த இரு பிரபல நட்சத்திர படங்களும் தமாதாக்கியமை கொடுமை.. கொடுமை...
இந்திய சினி வரலாற்றில் முதன் முறையாக என்ற தலைப்போடு ஹையர் பட்ஜெட் , நிவ் டெக்னாலஜி , மோஷன் கேப்சர் என்று எல்லாவற்றிலும் மிதமிஞ்சியதாக வெளியான படம் "கோச்சடையான் " . "தமிழ் சினிமா தலீவர் படமுன்னா எல்லாமே கிரேண்டு தான் . அவர வச்சு அவரு பொண்ணு சௌந்தர்யா அஸ்வின் என்னென்னமோ வெளாட்டெள்ளாம் காட்டிச்சு ப்பா ..தலைவரை சும்மா நடக்க (நடிக்க) வச்சு பார்த்தாலாவது நல்லா இருந்திருக்கும்!" என்று ரசிகர்களுக்கு சலிப்பையும் ஏமாற்றத்தையும் இந்த படம் தந்ததுவே மிச்சம்.
"சின்ன கல்லு பெத்த லாபமுலு "
கமலின் பஞ்ச தந்திரம் படத்தின் வசனத்தை போலவே குறைந்த செலவில் சத்தம் போடாமல் வந்த படங்களே சாதனை படைத்தது . தனித்தனியே நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், என்று அவர்களை மட்டும் நம்பி படம் பார்க்க வந்த காலம் மலையேறி போச்சு .
விளம்பர ஆக்கிரமிப்பு, வெளியீட்டாளர்களின் வஞ்சனை என்று எதுவித பின் புலமும் இல்லாமல் நல்லகதை, தேர்ந்த நடிப்பு எளிய இசை என்று புதியவர்களை அவர்களின் திறமைகளை மட்டுமே கருதி ரசிகர்களை ரொம்ப நாளைக்கு அப்புறமா நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தியை பல படங்கள் தந்தது,
சின்னபசங்களை கொண்டு கதைக்களம் அமைத்து டிரைலரிலேயே டி .ஆர். பாட, பவர்ஸ்டார் ஆட, சாம் ஆண்டர்சன் நடனத்தை இயக்க என்று கலக்கல் காம்பினேஷனுடன் ஆர்வம்மிக்க பொழுது போக்கு அம்சங்களுடன் வெளிவந்து வெற்றியீட்டிய படம் கோலி சோடா .
திரில்லர் கதையம்சம் , அழகான அசோக் செல்வன் துடிப்பான ஜனனி ஐயர் என்று கதையின் கடைசிவரை கண்ணிமைக்காமல் பார்க்கவைத்த படம் "தெகிடி" படத்தில் இசையும், "விண்மீன் விதையில்" , "நீ தானே" ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட். .
இது திரில்லர் பிலிம்மா இல்ல கொமடி பிலிம்மா? என வடிவேலு பாணியில் டவுட்டு கேட்க வைத்த படம் " யாமிருக்க பயமே " கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரியின் மாறுபட்ட பயத்தில் நமக்கே பயத்துடன் கலந்த சிரிப்பினை படம் முழுதும் கொண்டு சேர்த்த படம்.
நடிகை ஸ்ரீப்ரியா இயக்கத்தில் மலையாள திரைப்படத்தின் தழுவலாக வெளிவந்த படம் "மாலினி - 22 பாளையம் கோட்டை" அவலத்திற்குள்ளான பெண் ஒருத்தியின் கோபத்தில் குமுறல் படம். பேசவைத்தது.
இந்த வருடம் இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான ' திருப்தி பிரதர்ஸ்' வசூல் சாதனை புரிந்தவர்கள் என சொல்லலாம். " குக்கூ, மஞ்சப்பை, முன்டாசுபட்டி, மற்றும் சதுரங்க வேட்டை ஆகிய படங்களை வெளியிட்டு சத்தமில்லாமல் இல்லாபத்தை சுருட்டிகொண்டது.
இவ்வாறு கடந்த 8 மாதத்தில் வெளியான படங்கள், வெளிவராத படங்கள், பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்போமா?
...தொடரும் (நமக்கில்லை எண்டு கார்டு ... )
0 comments:
Post a Comment